செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பூசணிக்காய்க் கணக்கு - தமிழர் என்பதில் பெருமிதங்கொள்வோம்.

பண்டைய தமிழ்ப் புலவர்கள் பல்துறை அறிஞர்களாகவே இருந்துள்ளனர். கருவில் உருவாகும் குழந்தையின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளனர். வானில் செல்லும் விண்மீன்களின் பறத்தலை (சஞ்சாரத்தை) கவிதையில் சொல்லியுள்ளனர் என்று தமிழ்ப் புலவர்களின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம். அதில் மேலும் ஒரு மணிமகுடமாக கணக்கியலிலும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்களாக இருந்துள்ளனர் என்று இப்போது தெரியவந்துள்ளது.

பூசணிக்காயில் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கூற முடியுமா என்று கேட்டால், தேவையில்லாத வெட்டி வேலை என்று சொல்வோம். ஆனால் அந்தப் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றால் அதெப்படி என்று நம் புருவங்கள் உயர்வதைத் தவிர்க்க முடியாது.

அதைச் சொல்கிறது ஒரு செய்யுள். கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் ஒரு தமிழ்க் கணித நூல் எழுதியுள்ளார். அதன் பெயர் கணக்கதிகாரம்.

"கீற்றெண்ணி முத்தித்துக் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்திலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்" ‍ இது தான் அந்தக்கணக்கு.

ஒரு பூசணிக்காயின் கீற்றுக்களை எண்ணிக்கொண்டு அதை மூன்று ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையைப் பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கை என்பது இந்தப் பாடலின் பொருள்.

சரி அதைக் கணக்கு மூலமே பார்ப்போம்.

ஒரு பூசணிக்காயில் உள்ள கீற்றுக்களின் எண்ணிக்கை 5 என வைத்துக்கொள்வோம். பாடலின் படி 3,6,5 ஆகியவற்றால் பெருக்கக் கிடைப்பது 450 ஆகும். அதைப்பாதியாக்கினால் 225 ஆகும். அதை மீண்டும் முன்றால் பெருக்கக் கிடைப்பது 675 ஆகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லையாம். எங்கோ ஒரு மூலையில் கிடைத்த ஓலைச்சுவடியில் இந்தச் செய்யுள் கிடைத்துள்ளது. இதைப் போன்ற வேறு செய்யுள்கள் உள்ளனவா? என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்

நன்றி: தினத்தந்தி திண்டுக்கல் பதிப்பு 28/01/2013