திங்கள், 29 அக்டோபர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்


படம் :பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள்: RV உதயகுமார்

பல்லவி

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

சரணம் 1

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

சரணம் 2

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

பல்லவி

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும்


எனக்கு நண்பர் ஒருவர் உண்டு. அவரிடம் தொழிற்நுட்பம் தொடர்பாகச் சில மாறுபட்ட வழக்கங்கள் உண்டு.
1.       எது எதற்காகப் பயன்படுகிறது என்பது கூடத் தெரியாமல், நிறைய இலவச இணையக் கணக்குகளைத் தொடங்குவது.
2.       அனைத்திற்கும் எளிய கடவுச்சொல் கொடுப்பது. .கா: xyz789
3.       அனைத்திற்கும் ஒரே கடவுச்சொல் கொடுப்பது.
4.       கடவுச்சொல்லை யாருக்கும் சொல்லாமல் இருப்பது. ஆனால் அனைத்துக் கணக்குகளுக்கும், ஒரே கடவுச்சொல் கொடுத்துள்ளேன் என்பதை அனைவருக்கும் சொல்வது.
இதையெல்லாம் நண்பரிடம் கண்ட நான், இது போன்றெல்லாம் செய்யாதீர்கள். சில இணையதளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கொடுத்த அந்தக் கணக்கிற்குரிய கடவுச்சொல்லை, உங்கள் மின்னஞ்சலை உடைக்கப் பயன்படுத்திக் (crack) கொள்வார்கள். என்று சொல்லிய பின், நண்பர் என்னைப்பார்த்து குறுநகை செய்வார். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எனது கணக்கை யார் பயன்படுத்துவார்கள்? என்று வினவுவார்.
“ஒங்களுக்குப் பட்டாத்தான் தெரியுமையா...” என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அதைப்பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டேன்.
திடீரென்று ஒரு நாள் அவரது ஜிமெயில் கணக்கு உடைக்கப்பட்டது. கடவுச்சொல்லும் மாற்றப்பட்டு விட்டதுநண்பருக்கு நான் இது பற்றியெல்லாம் நான் சொன்னமையால், நான் தான் அவரது கணக்கினை உடைத்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து நிலைமையை விளக்கினார்.
ஐயா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதையெல்லாம் விடுத்து நான் இதைச் செய்வேனா என்றதும், நண்பர் என்னை நம்ப மறுத்துவிட்டார்.  எல்லாவற்றிற்கும் ஒரே கடவுச்சொல் கொடுத்திருந்ததை உடனே மாற்றுங்கள் அல்லது அதையும் இணையக்கயவர்கள் உடைத்து விடுவார்கள் என்றதும், அச்சம் மேலிட்டவராய், இணையத்தில் உலாவச் சென்றார். மற்ற கணக்குகளை எல்லாம் மாற்றியமைத்தவர், மீண்டும் மீண்டும் முயற்சித்தும், ஜிமெயில் கணக்கினை மட்டும் திரும்பப் பெற இயலவில்லை என்று அழாத குறையாக என்னிடம் வந்து சொன்னார்.
இதற்கு ஜிமெயிலே வழிவகை செய்கிறது. நீங்கள் தொலைத்த கணக்கின் பயனர் பெயரைக் கொடுத்தால் அது உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க உதவுகிறது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரது கடவுச்சொல்லை எங்கள் அலுவலக இணைய இணைப்பிலேயே மாற்றிக் கொடுத்தேன்.
எனினும், அவரது முந்தைய மின்னஞ்சல்கள் இணையக் கயவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இதையறிந்ததும் நண்பர் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.
இப்பொழுதேல்லாம் நண்பர் வேவ்வேறு கடவுச்சொற்கள் கொடுக்கிறார். தேவையற்ற இணையக் கணக்குகளைத் தொடங்குவதை நிறுத்திவிட்டார்.
கடவுச்சொல் முதன்மை (importance) கருதி நண்பர் அமைதிகாக்கிறார். எங்கள் குழுவிலே, கடவுச்சொல் பற்றி பேச்சு எழுந்தாலே, காதத் தொலைவு சென்று விடுகிறார்.
என்ன செய்வது? கண் கெட்டபின் கதிரவன் வணக்கம் கிட்டுமா?

ஒரு செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை - கணினிப் பட்டறிவு


பொதுவாக ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச்  சொல்வதற்கு சிலர் அச்சுறுகின்றனர். இது இந்நாட்களில் மட்டுமல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது. அதற்குக் காரணம் எங்கே நாம் சொல்லிவிட்டால் அடுத்தவர் முன்னேறி விடுவாரோ என்ற எண்ணம் தான். இது மிகவும் பழமையான எண்ணம். தொழிற்நுட்பத்துறை மிகவும் விரைவாக முன்னேறி வரும் இந்நாட்களில் இத்தகைய மனப்போக்குத் தேவையில்லை.
எனக்கு நேர்ந்த படுதல்க‌ள் (அனுபவம்) மூலம் இதனைக் கூற விழைகிறேன்.
Start பொத்தான் பட்ட‌ பாடு:
சரியாக பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு (2001) நான் முதுகலை கணினி அறிவியல் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது வகுப்புத் தோழன், Start பட்டனின் பெயரை Hello என்று மாற்றி வைத்திருந்தான். அதை ஒரு பெருமையாக அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தான். ஆனால் அதை மாற்றும் வழி முறையினைக் கூறவில்லை. அதை அவனே கண்டறிந்தது போல் பொத்திப்பொத்தி வைத்திருந்தான்.
அந்த வழிமுறையினை வேறு சில நண்பர்கள் மூலம் நான் ஒரு மாதத்திற்குள்ளாகத் தெரிந்து கொண்டேன். அப்பொழுதெல்லாம் start பட்டனை மாற்றுவதற்கு மென்பொருட்கள் இல்லை. Edit கட்டளை மூலமே explorer.exe கோப்பினை ஹெக்ஸா டெசிமல் எடிட் செய்து மாற்ற வேண்டும். நான் அவனை விட ஒரு படி மேலே போய் Prasanna’sStuff (15 எழுத்துக்கள்) கொண்டு Start பட்டனை வடிவமைத்திருந்தேன். அப்பொழுது அது அவ்வளவு பெரிய செய்தி. அதன் பிறகு தமிழ் கம்ப்யூட்டர் இதழில் Start பட்டனை மாற்றும் முறை வெளியானது. பிறகு சில ஆண்டுகளிலேயே விசுவல் பேசிக் கொண்டு Start பட்டனை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும் நிரல் கிடைத்தது.
அதன் பிறகு ஏன் Start பட்டனை மாற்ற வேண்டும், அது அப்படியே இருந்து விட்டுப் போகிறது என்று Start பட்டனை பலமுறை மாற்றியவர்கள் தெரிவித்தார்கள். விண்டோஸ் 7ல் Start பட்டனுக்கு மாற்றாக ஐக்கான் மட்டுமே இருக்கிறது. விண்டோஸ் 8 பீட்டா பதிப்பில் Start பட்டனே இல்லை. இன்று யூடியுபில் Start பொத்தானை மாற்றுவது எப்படி என்ற காணொளி மூலம் எளிதில் கற்று Start பொத்தானை மாற்றலாம். அப்படியிருந்தும், இன்று யாரும் பட்டனை மாற்ற விரும்புவதில்லை.
பதினொரு ஆண்டுகளுக்கு முன் என் வகுப்புத் தோழன் செய்ததை நினைத்தால், இபோது எனக்கு நகைப்புத்தான் வருகிறது.

குப்பைத் தொட்டி (ரீசைக்கிள் பின்) பட்ட‌ பாடு:
அதே வகுப்புத் தோழன் சில நாட்கள் கழித்து எப்படி குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது என்று கூறினான். அது Start பொத்தானை மாற்றுவதை விட எளியதுதான். Regedit செய்து மாற்ற வேண்டும். மாற்றம் செய்யும் பொழுது வேறு ஏதேனும் தவறாக நிகழ்ந்தால் regedit ஐ இழக்க நேரிடும். ஆக மிகவும் கண்ணுங்கருத்துமாகச் செயல்பட வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கும் மூன்றாம் நிலை மென்பொருள் (Third-Party tool) இலவசமாக இணையத்தில் கிடைத்ததாக நினைவு.
விண்டோஸ் ஏழில் வலது சொடுக்கில் எளிமையாக குப்பைத் தொட்டியின் (Recyle Bin) பெயரை மாற்றுவது கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொது யாருமே குப்பைத் தொட்டியின் பெயரினை மாற்ற விரும்புவதில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள்.

HTML (Hyper Text Markup Language):

                முன்பு இந்த நிரல் மொழிக்கும் பல டேகுகளை (Tag) மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய இணையப்பக்கம் தயாரிக்க மணிக்கணக்கில் HTML நிரல் எழுத வேண்டும்.  இதனையும் எனது வகுப்புத் தோழன் எனக்குச் சொல்லிக்கொடுக்க மறுத்தான். பிறகு விரைவாகக் நான் பிற வகுப்புத் தோழர்களின் உதவியோடு இரண்டே நாட்களில் HTML நிரல் மொழியினைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, Microsoft Frontpage editor மூலம் தானாகவே நிரல் செய்யும் முறையினையும் (automatic html page creation) கற்றுக் கொண்டேன். இன்று HTML நிரல் மொழி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக பல மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருக்கிறது. இணையம் மிக விரைவாக இயங்கும் வகையில், HTML5.0, AJAX நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
இந்தப் பட்டறிவின் மூலம் அறியப்படுவது, ஒரு தொழிற்நுட்பச் செய்தியினைச் சொல்வதனால் ஒன்றுமில்லை. ஏனெனில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. ஒன்றைச் சொல்லாமலே வைத்திருப்பதனால் நாமோ, அல்லது  நமது கண்டுபிடிப்போ தான் காலாவதியாகி (out-dated) விடும்.
எது எப்படியிருப்பினும், எனக்குச் சொல்லித்தர மறுத்ததனால் நானே முயற்சி செய்து நுட்பங்களைத் தெரிந்து கொண்டதற்கு எனது நண்பனுக்கு நன்றி கூறவே விரும்புகிறேன். அவன் இப்பொழுது ஃபின்லாந்தில் வசித்து வருகிறான். அக்சென்ஷரில் (Accenture) பணிபுரிகிறான்.