திங்கள், 17 செப்டம்பர், 2012

தேனினும் இனியது இந்த இசை


   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூக்கத்தைக் கெடுத்த அருமையான நிகழ்ச்சிவிடுமுறை நாளாதலால், வழக்கமாகத் தூங்கலாம் என்று நினைத்த பொழுது செயா தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகியது. படத்தின் பாடல்களை ஏற்கனவே கேட்டும், பலவகையான திறனாய்வுகளை[1] வலைப்பூக்களில் படித்தும், பட்டும் கொண்டிருந்தாலும், இசைஞானியின்[2] நிகழ்ச்சியாதலால் பார்க்கவே மனதிற்குத் தோன்றியது. சரியாக பிற்பகல் 2:30க்கு தொடங்கிய நிகழ்ச்சி முடிய மாலை 7:30 மணி ஆகிவிட்டது. நிகழ்ச்சியில் பல இயக்குநர்களின் படுதல்கள்[3] பகிரப்பட்டன. எல்லாரும் பொறாமைப்படும் மனிதராக படத்தின் இயக்குநர்[4] பேசப்பட்டார்படத்தின் பாடல்கள் அனைத்தும் நிகழ்நேர இசையுடன்[5] பாடப்பட்டன. சரியாக எண்பதுகளிலேயே ‌தமிழ் திரையிசையில் மறக்கப்பட்ட‌ நிகழ்நேர இசை மீண்டும் வந்தது இனிமை.
   நிகழ்நேர இசையில் வறட்டு இழுவைக் கருவிகளிலும்[6], நீண்ட ஊதி[7] கருவிகளிலும் வாசிக்கப்பட்ட இசைஞானியின் சில திரை இசைப்பாடல்களின் பகுதி[8] நிகழ்ச்சியில் முதலில் வாசிக்கப்பட்டது.
அவையானவை பின்வருமாறு:
  1. எந்தப்பூவிலும் வாசமுண்டு (முரட்டுக்காளை)
  2. தென்பாண்டி சீமையிலே (நாயகன்)
  3. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
  4. ராஜா கையவச்சா (அபூர்வ சகோதரர்கள்)
  5. கண்மணி அன்போடு (குணா)
  6. சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
 இந்தப்பாடல்களை இதுவரை வார்த்தைகளோடு கேட்ட நாம், வார்த்தைகள் இல்லாமல் கேட்ட பொழுது கிடைத்த இனிமையே தனி.
 இந்தப்பாடல் இசையினை வாசித்த ஆங்கிலக்கலைஞர்[9] இசைஞானிக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது என்று கூறிய விதம் நம்மை மகிழவும், பெருமிதம் கொள்ளவும் வைத்தது.
  படத்தின் இயக்குநர், நான் விரும்பிய ஐந்து பாடல்களைப் நீங்கள் பாட வேண்டுமென்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கூறியவுடன் "அதுசரி" என்று தொடங்கிய ஞானி, பின்வரும் பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், சில நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
  1. கோடைகால காற்றே... (மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியது)
  2. கண்மணியே காதல் என்பது... - ஆறிலிருந்து அறுபது வரை (எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.ஜானகிஇந்தப்பாடல் அந்தக்காலத்திலேயே வெட்டி ஒட்டப்பட்டது.
  3. அடி ஆத்தாடி... - கடலோரக்கவிதைகள் (இளையராஜா, எஸ். ஜானகி)
  4. ஒரு பூங்காவனம்... - அக்னி நட்சத்திரம் (எஸ். ஜானகி) நீச்சல் குளத்தில் பாடப்படும் பாடல் என்று சொன்னவுடன் தான் செய்த மெட்டையும், அதற்கு பொருத்தமான சரணம் வர தான் பட்ட பாட்டையும் அவர் கூறியது சிறப்பு.
  5. தென்றல் வந்து... - அவதாரம் (இளையராஜா, எஸ். ஜானகி)
   இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இப்படத்திற்கு நாட்டின் மிக உயரிய விருது[10] கிடைக்கும் என்று கூறியவுடன், அது தனக்குத் தேவையில்லை என்று கையசைத்தது, அவர் ஞானிதான் என்பதை இன்னொரு முறை உறுதிப்படுத்தியது.
   படத்தின் இயக்குநருக்கு இருக்கும் பல பெண் துணை இயக்குநர்கள்[11] போல, இசைக்கலைஞர்களிலும் பல பெண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
   இசைக்கருவிகளின் ஆதிக்கம் அதிகமாகவும், உரத்த குரலில் கத்துவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தலைமுறை, இது போன்றதொரு இசையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற இசையினை இசைஞானியால் மட்டுமே கொடுக்க இயலும். படத்தின் பாடல்கள் கேட்கக்கேட்க அனைவருக்கும் பிடிக்கலாம்.
   இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துவோம்.

[1]  விமர்சனங்கள்
[2] இளையராஜா
[3] அனுபவங்கள்
[4] கௌதம் வாசுதேவ் மேனன்
[5]  Live Concert
[6]  Violion, Bow
[7]  Trumpet, Clarinet
[8]  Part of the music
[9]  Conductor Nick
[10] National Award
[11] Anjana, Janet

0 Comments: